கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதைவிட அறிவுள்ள ஒரு மனிதன் கோழியும் முட்டையும் எங்கிருந்து வந்தது என சிந்தித்தால் விடை கிடைக்கும்.
பள்ளிவாயில் நிர்வாகம் சரி இல்லை என்று ஒரு சாராரும், பள்ளிவாயிலில் பணிபுரியும் மெளலவி சரி இல்லை என்று ஒருசாராரும் கூறுவது பலகாலமாக நடந்து வருவம் சர்ச்சையாகும்.
இவர்கள் இருவரும் சரியில்லாமல் போனதற்கு அடிப்படைக்காரணமே திருவாளர் ஜமாத்தார்கள் (பொதுமக்கள்) தான். என்பதை என்றைக்காவது யாராவது சிந்தித்ததுண்டா? அல்லது இதற்கான நடைமுறை சாத்தியமான தீர்வுகளை யாரேனும் முன்வைத்ததுண்டா? அல்லது தீர்வுகளை முன்வைத்தால் அதனை நடைமுறைப் படுத்தும் பணியில் யாராவது தங்களை இனைத்துக் கொள்ளத் தயாரா?
ஒரு மெளலவியின் கண்ணீர்: யார் குற்றவாளி? என்ற சமரசம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் புலம்பலையும் அதில் நடைமுறை சாத்தியமான தீர்வுகள் இல்லாததையும் கண்டேன். அது சம்பந்தமான இரண்டு கடிதங்களையும் பார்த்தபின் இவர்கள் பிரச்சனையின் ஊற்றுக்கண்ணை விட்டுவிட்டு , கடிதம் மூலம் இரங்கற்பாவும், கிண்டல்கேலியும் செய்திருப்பது வேதனைக்குரியது என்பதையும் உணர்ந்தேன்.
முஸ்லிம் சமுதாயத்தின் மத்திய நரம்புமண்டலமாகவும் (central nervous system) அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகானும் கேந்திரமாகவும் விளங்கிய பள்ளிவாயில்கள் சடங்குரீதியான தொழுகையை நிறைவேற்றக்கூட சில இடங்களில் தகுதியை இழந்திருப்பது வேதனைக்குரிதாகும்.
புன்னகை பூப்பதும் ஒரு தர்மம் என சொன்ன நபி (ஸல்) அவர்கள் கண்கள் சிவந்து கோபமுற்ற நேரங்களும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
சில வருடங்களுக்குமுன் முஹம்மது கான் பாக்கவி அவர்கள் சமரசத்தில் இமாமத்தையும், தர்ஸ் எனப்படும் மார்க்க போதனையையும் சேவையாகச் செய்யவேண்டும் என்றும் தங்களது தேவைகளுக்கு உழைத்துச் சாப்பிட வேண்டுமென்றும் நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ஆனாலும் அதனை எதிர்த்தும் விமர்சனம் செய்தும் பலர் அப்போதே எழுதியிருந்தார்கள். இந்தப்புலம்பலுக்கு பதிலாக அந்தக்கட்டுரையை மறுபடி பிரசுரம் செய்தால் கூட போதும். ஆனாலும் (ஜமாத்தார்கள்) எனும் குற்றவாளிகளின் பிரதிநிதியாக நான் வேறோரு கோணத்தில் இப்பிரச்சனையை அனுகினால் புதிய கசப்பான உண்மைகளும் வெளிவரும்.
இது ஒரு தொடர்கதையாக தொடர வேண்டுமா? அல்லது முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா? என்பது, கசப்பான உண்மைகளை நாம் ஜீரணிக்கத் தயாரா? என்பதைப் பொருத்தும் களத்தில் இறங்கி வேலை செய்ய நாம் தயாரா என்பதைப் பொருத்தும் உள்ளது.
இப்பிரச்சனையை ஒரு செயல்படும் அறிஞன் எவ்வாறு அனுகுவான் என்பதைப் பார்ப்போம்:
பிரச்சனை:
பெரும்பாலான பள்ளிவாயில்களின் நிர்வாகமும், ஜமாத்தை வழி நடத்துவர் என எதிர்பார்க்கப்படும் மெளலவிகளும் தகுதிகள் இல்லாதிருப்பதன் மூலம் இந்த சமுதாயம் மிகப்பெரும் சோதனையை சந்தித்து வருகின்றதே இதற்கு விடிவே இல்லையா?
பிரச்சனைகளை விளக்கிச் சொல்லுதல்:
1.நிர்வாகிகள் எவ்வாறு நிர்வாகம் செய்யவேண்டுமோ அவ்வாறு நிர்வகிப்பதில்லை.
2.மெளலவிகள் எவ்வாறு சமுதாயத்தை வழி நடத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு நடப்பதில்லை.
3.ஜமாத்தார்கள் எவ்வாறு தாங்கள் நடந்து கொள்ளவேண்டுமோ அதைப்பற்றி சிறிதும் அக்கறை இல்லை.பொதுமக்கள், நிர்வாகிகள், மெளலவிமார்கள் இவர்கள் எல்லோருமே தத்தம் கடமைகளை செய்யாமல் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் மற்றவரை நோக்கிவிரலை நீட்டி குற்றம் சுமத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
இதன் காரணகாரியங்களை ஆராய்ந்து விருப்பு வெறுப்பின்றி தீர்வுகளைமுன் வைத்தால் தூய எண்ணத்துடன் செயலாற்ற விரும்பும் சில சகோதரர்களுக்கேனும் உபயோகமாய் இருக்கலாம் என எண்ணுகிறேன்.
பிரச்சனைகளை பகுப்பாய்வுசெய்தல்:
முதலாவதாக இங்கே நாம் பொதுமக்கள், நிர்வாகிகள், மெளலவிமார்கள் என்று சுட்டிக்காட்டுவது பெரும்பாலானவர்களைக் குறிக்கும். ஏனென்றால் சில இடங்களில் நல்லவிதமாக பணிகள் நடந்துவருவதையும், அதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களையும் விதிவிலக்காகக் கொள்ளவேண்டும்.
தலைமை: சுமார் 300 பேர்களுக்கும் அதிகமாக, பள்ளிவாயில் பொறுப்பாளர்கள் / தலைவர்கள் என நிதி கேட்டு என்னிடம் பலகால கட்டங்களில் வந்தபோது அவர்களிடம் நான் கேட்ட முதல் கேள்வி “பள்ளிவாயிலை யார் நிர்வகிக்க வேண்டும் என அல்லாஹ் சொல்லியுள்ள வசனம் தெரியுமா?” என்பதுதான். ஒருவருக்குக்கூட பதில் தெரியவில்லை என்பது கசப்பான உண்மை. அடுத்து இவர்கள் கோடிக்கணக்கில் பட்ஜட் போட்டு நன்கொடை வேண்டும் என்பார்கள். ஏற்கனவே உள்ள பள்ளிவாசல்கள் போதுமானதாக இருந்தாலும் அறியாமையின் காரணமாக ஜில்லாவிலேயே உயரமான மினரா, பளிங்குத்தரை, தேவைக்கு அதிகமான பெரிய கட்டிடம், அலங்காரம் இப்படி முடிவுகளை எந்த முன்மாதிரியும் இன்றி எடுப்பார்கள். ஆனால் நல்ல மெளலவிக்கு போதுமான சம்பளம் கொடுக்கத் தயாரில்லை. நன்கொடை என்றபெயரில் கடன்பட்டு சிரமப்படுபவர்களையும் வற்புறுத்தி கட்டாய தர்மம் வாங்குவார்கள் இப்படி இவர்கள் செயலுக்கு ஒரு எல்லையே இல்லை. எவ்வாறு நிர்வகிக்கவேண்டும் என தங்களுக்குத் தெரியாது என்பதுகூட தெரியவில்லை . இவர்கள் எப்படி நல்ல பன்பாடுள்ள, மார்க்க ஞானம் உள்ள மெளலவியை தேர்வுசெய்யும் தகுதியை பெற்றிருப்பார்கள்.
மெளலவிமார்: சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாயில்களுக்கும் , அமைப்புகள் நடத்தும் மதரஸாவிற்கும் 100க்கும் மேற்பட்ட மார்க்க ஆசிரியர்களை (mudharris) நேர்முகத் தேர்வுக்கு அழைத்துப் பரீட்சித்த அனுபவம் எனக்கு உண்டு. இஸ்லாம் பற்றி எளிமையான அடிப்படை கேள்விகளுக்குக்கூட சரியாகப் பதில் தெரியாதவர்களே ஏராளம். இங்கே இண்டர்வியூவில் சிங்கப்பூர் முப்தி சர்டிபிகேட்டை வாசிக்கச்சொன்னால் சரியாக வாசிக்க முடியாத பரிதாபம். அரபியில் எளிமையாக கேள்விகள் கேட்டால்கூட புரியாமல் பள்ளிப்பிள்ளைகளைப்போல் விழிக்கும் பரிதாபம். கடைசியாக சர்ட்டிபிகேட்டில் அரபி எழுத பேச தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே என்று என்னைப்பார்த்துக் கேட்க நம் மதராசாக்களைப் பற்றி நான் எதுவும் சொல்லமுடியாமல் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை. சல்லடை போட்டுச் சலித்தே இப்படி என்றால் பிறரைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஜமாத்தார்: தவறான தலமையை தேர்வுசெய்துவிட்டு அவர்களை குற்றமும் சொல்வது நியாயமா?.”உங்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறதோ அப்படியே உங்களின் மீது தலைமை திணிக்கப்படும்” என நபி(ஸல்) கூறியதை வசதியாக மறந்துவிட்டீர்களா? உங்களைத்தான் முதலில் நீங்கள் திருத்தவேண்டும் என்பது இப்போதாவது புரிகின்றதா? நீங்கள் தலைமை பதவிக்கு அல்லாஹ் சொன்ன தகுதி இல்லாமல் பதவி ஆசை மட்டும் உள்ளவனை தேர்ந்தெடுப்பதே நபிவழிக்கு நேர் எதிரானதல்லவா?. “பதவிக்கு ஆசைப்படுவதே தகுதியின்மை அல்லவா. பதவியை விரும்பாத தகுதியான நேர்மையான நல்லவர்களை தேடி பதவி தரப்பட வேண்டும் என்றல்லவா சொல்லி இருக்கிறார்கள். குருடனைப் பிடித்து ராஜ பார்வை பார்க்கச் சொல்வது குருடனின் குற்றமா? உங்கள் குற்றமா.
இப்போது பிரச்சனையின் ஊற்றுக்கண், எல்லோரையும் குற்றம் பிடிக்கும், பிறருக்கு மார்க்கத்தை சொல்ல விரும்பும், அதேசமயம் தன் அளவில் கற்றுக்கொள்ள, திருந்த, பின்பற்ற தயாரில்லாத ஜமாத்தினர்தான் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.
நாம் இப்போது தீர்வுகளுக்குப் போவதற்கு முன்னால் ஒரு சில உண்மைச் சம்பவங்களையும், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களையும், நமது உயிருக்கும் மேலான நபி (ஸல்) காலத்திலும் அதன் பிற்பகுதியிலும் எவ்வாறு பள்ளிவாயில் நிர்வாகம் நடந்தது என்பதையும் தெரிந்து கொண்டால் நீங்கள் கசப்பாக இருந்தாலும் நபி வழிதான் சரியான வழி அதைவிட்டால் நமக்கு இழிவு தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
சம்பவங்கள்:
பள்ளிவாயில் நிர்வாகம்
1. சாராயக்கடைக்கு NO OBJECTION LETTER கொடுத்தவர் ஒரு பள்ளியின் முத்தவல்லியாக இருக்கும் பரிதாபம் (மது அருந்துவது சைத்தானின் அருவருக்கத்தக்க செயல் என அல்லாஹ் கூறுகிறான். மது பாவங்களின் தாய் என நபி ஸல் கூறுகிறார்கள்)
2. சமூகத்தில் பிரச்சனை ஏற்படுகின்றபோது சம்பந்தப் பட்டவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைக்கக்கூடது என தீர்மானம் போட்டு நிறைவேற்றிய பள்ளிவாயில் நிர்வாகம். ( இருவருக்கிடையே சமாதானம் செய்வதை தொழுகையை விட நோன்பை விட சிறந்த செயல் என நபி ஸல் கூறுகிறார்கள்)
3. முத்தவல்லி வட்டி வியாபாரி என தெரியாமல் வட்டியை பற்றி பேசிய மெளலவி நீக்கம். ( வட்டி வங்குபவன் அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்பவன் என நபி (ஸல்) நமக்கு அறிவுறுத்துகின்றார்கள்)
4. நம்மிடமே கெஞ்சி பணம் நன்கொடையாக வாங்கி பள்ளிவாசல் கட்டிவிட்டு நம்மையே (முஸ்லிம்களில் ஒரு சாராரை) வரக்கூடாது என எழுதிப்போடும் கொடுமை [பிறருக்கு அழைப்பு கொடுக்கவேண்டிய முஸ்லிம்கள் இருப்பவரை விரட்டுவது எத்தகைய படுபாதகச் செயல்]
5. பிச்சை எடுக்க வருபவர்களை பயான் செய்து உங்கள் ஹக்கை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அசத்தியத்தை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது, சத்தியத்தைப் பேச சந்தர்ப்பம் கேட்டால் மனுக்கொடுங்கள் என்று சொல்லி தட்டிக் கழிப்பது. [ இது அறியாமையின்/அநியாயத்தின் உச்சக்கட்டம் இல்லையா.]
இன்னும் ஏராளம் ஏராளம் ஏராளம்....
மெளலவி:
1. புதுக்கோட்டையில் ஒரு பள்ளிவாயிலின் நாலாபுறமும் ஒலிபெருக்கி. வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ பயான். அப்பகுதியில் உள்ள எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இமாம் என அழைக்கப்படுபவர் “அல்லாஹ் முதன் முதலில் மனிதனைப் படைக்க களிமண்ணை அழைத்ததாகவும் அது வர மறுத்ததாகவும்” கற்பனை கதை சொல்கிறார். இவருக்கும் பெயர் மார்க்க அறிஞர்.
2.குமர் காரியம் என்று ஒன்று இல்லாத இஸ்லாத்தில், நபி (ஸல்) ஆணுக்கு வரதட்சனை எனும் பிச்சை கொடுப்பதை ஆதரித்து பயான். இவருக்கும் பெயர் மார்க்க அறிஞர்..
3. சென்னையில் ஜும்ஆ தொழுகைக்குவந்த ஒரு ஆப்பிரிக்கரை தொப்பி போடாததன் காரணமாக வெளியே போகச் சொன்ன அநியாயக்காரர். இவருக்கும் பெயர் மார்க்க அறிஞர்.
4.பள்ளிவாசலுக்குள் தாயத்து, தகடு ஸ்டாக் வைத்துக் கொண்டு மோகினிப் பேயை விரட்டுகிறேன் என பெண்களை தொட்டு கேவலப்பட்டு அடிவாங்குதல். நல்ல நேரம் குறித்துக் கொடுத்தல் ( இத்தகைய காரியங்களில் ஈடுபடுபவன் முஹம்மதுக்கு அருளிய மார்க்கத்தை நிராகரித்து விட்டான் என்றும், நேரம் காலம் பார்ப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்றும் நபி (ஸல்) கூறியுள்ளது இவர்களுக்குத் தெரியாதா?.)
5.இஷா முதல் பஜ்ர் வரை மனைவியை தொடாமல் இறைவனுக்காக தியாகம் செய்தவரிடம், இறைவன் கீழ் வானத்திற்கு வந்து, எனது அடியானே, எனக்காக நீ செய்த தியாகத்திற்கு உனக்கு நான் என்னசெய்யவேண்டும் என அல்லாஹ் கேட்டதாக புருடா கதை. மனைவியோடு உடலுறவு கொள்வதும் ஒரு தர்மம் என நபி (ஸல்) கூறியிருக்க அதற்கு நேர்மாறாக யாரோ பிதற்றியதை மார்க்கம் என சொல்லுவதை கேட்டு ரத்தம் கொதிக்கவேண்டாமா? நான் இதை எடுத்துச் சொல்லியும் மக்கள் பாராமுகமாக சென்றனர். அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் இதயம் நடுங்கிவிடும் என குர்ஆன் உண்மை மூமின்கள் குறித்துக் கூறுகின்றது. இவர்களுக்கு இதயமே இல்லை போலும்.
இதுபோன்ற எண்ணற்ற கட்டுக் கதைகள் தாங்கமுடியாமல் பலர் தமிழ் மொழி அல்லாத பயான் உள்ள பள்ளிகளை தேடிச்செல்வதுண்டு.
பொதுமக்கள்
தீயவன் என்று தெரிந்தும் உறவினன், கடன் கொடுத்தவன், கடன் தரும் பணக்காரன், குறுக்குவழியில் காரியம் சாதிக்க உதவும் அரசியல்வாதி, பினாமி பெயரில் மதுக்கடை வைத்திருக்கும் குண்டர், இப்படிப்பட்டவர்களை குறுகிய கால நலனுக்காக தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்வதன் மூலம், சஹாபாக்கள் செய்த தியாகத்தை சிறுமைபடுத்தும் நாம் தான் தவறு செய்கிறோம். நாம் தெரிந்தும் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடுபவர்கள். நல்லவிதமாக வருமானம் ஈட்டிக் கொடுப்பார் , களவாடமாட்டார் என்று மார்க்கத்தில் பூஜ்யமாகவோ அல்லது மார்க்க விரோதமாகவோ இருந்தால் பரவாயில்லை என தேர்வு செய்வது.
வார்த்தை பிரயோகம்.
யார் ஆலிம்?
ஆலிம் என்ற வார்த்தைக்கு அறிஞர் என்று சாதாரணமாக பொருள் படும். ஆனால் மார்க்க அடிப்படையில் அதற்கான விளக்கத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
அல்லாஹ்வை அதிகமாக அஞ்சுபவரே ஆலிம் என குர்ஆன் கூறுகின்றது.
தான் (மார்க்கத்தை) அறிந்ததற்கேற்ப செயல்படுபவரே அறிஞர் என்பதாக நபி (ஸல்) கூறுகிறார்கள்.
மேலும் அறிஞர்களே நபிமார்களின் வாரிசு என்பதாகவும் கூறுகின்றார்கள்.
சர்ட்டிபிகேட் வைத்திருப்பவர்கள் அல்ல வாரிசுகள். நபிமார்களின் ஞானத்திற்கும், நற்பண்புகளுக்கும், பயபக்திக்கும்தான் அவர்கள் வாரிசுகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.
அறியாமையில் இருப்பவர் வேறு. ஆனால் தெரிந்தும் மறைத்தால் அது அறிவு/ அமானத் மோசடி இல்லையா.
அகில உலக அளவில் பிரசித்திபெற்ற ஷேக் யூஸ¤ப் அல் கரளாவி (அகில உலக மார்க்க அறிஞர் பேரவையின் தலைவர்), ஷேக் தந்த்தாவி ( அஸ்ஹர் பல்கலை கழகத்தின் முதல்வர், எகிப்து) அஷ்ஷேக் அகார் முஹம்மது ( உதவி முதல்வர் ஜாமியா நளீமியா, இலங்கை) இவர்கள் எல்லோரும் தங்களை ஆலிம் என்று அழைத்துக் கொள்வது இல்லை , ஷேக் என்ற பட்டத்தோடுதான் இருக்கிறார்கள்.
ஆனால் அறியாமையின் மொத்த உருவமாகவும், அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் சிறிதும் இல்லாதவரையும், எந்த பாடதிட்டத்திலும் கட்டுப்படாத ஒரு சர்ட்டிபிகேட் வைத்திருப்பவரை ஆலிம் எனக்குறிப்பிடுவது கேலிக்கூத்து இல்லையா?.
கலீபா மாமூன் குர்ஆன் படைக்கப்பட்டதா அருளப்பட்டதா என்றகேள்விக்கு அருளப்பட்டது என பதில் சொன்ன அவ்வளவு பேரையும் சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். சித்திரவதை தாங்காமல் படைக்கப்பட்டதுதான் என்று சொல்லி அனைவரும் வெளியேறிவிட இமாம் ஹன்பல் அவர்கள் மட்டும் அருளப்பட்டது தான் என்று சொல்லி சொல்லனா சித்திரவதை அனுபவித்தார்கள். இவர்களைத்தான் அக்காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு புத்துயிர் அளித்தவர் என மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி தனது இஸ்லாத்திற்கு புத்துயிர் அளித்த்வர்கள் எனும் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். இவர்தான் அல்லாஹ்வின் பார்வையில் நபி (ஸல்) வழிமுறையில் ஆலிம். ஏனென்றால் இவர்தான் அக்கால கட்டத்தில் அல்லாஹ்வை அதிகமாக அஞ்சியவர்.
சிங்கப்பூரில் கூட சிங்கப்பூர் இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் (SINGAPORE ISLAAMIC TEACHERS ASSOSIATION) என பெயர்சூட்டி இருக்கிறார்களேயொழிய ஆலிம்-உலமா-அறிஞர்-SCHOLAR என்ற பதத்தை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஆசிரியர்கள் எகிப்திலுள்ள அஸ்கரிலும், மதீனாவிலுள்ள பல்கலைகழகத்திலும், இதுபோன்ற இன்னும் சிறந்த மதராசாக்களிலும் பயின்றாலும் இவர்களை உஸ்தாத் என்று தான் அழைக்கிறார்கள். ஆலிம் என்று ஒருபோதும் சொன்னதில்லை.
ஒரு நாள் என் சகோதரர் தன் பிள்ளைகள் இவ்வாறு தன்னிடம் கேட்பதாகக் கூறினார். கிருத்துவப் பாதிரியார்கள் அன்பாகவும், இனியமுகத்துடனும், சரியான இலக்கணத்துடனும் உச்சரிப்புடனும் தமிழிலில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். நமது ஆலிம்சாக்கள் மட்டும் இறுக்கமானமுகமும், கடினசுபாவமும், தவறான தமிழில் பேசுபவர்களாகவும் உள்ளனர் எனக் கேட்கிறார்கள்.
நான் பதில் கூறினேன். “முதலாவதாக மெளலவிமார் உன்னையும் என்னையும் போல் மனிதர்கள் சிலசமயங்களில் அவர்களில் சிலர் பொருளாதாரவசதி யின்மையின் காரணமாகவும், சிலர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல மறுத்ததாலும், பள்ளிக்கூடங்களில் வெற்றிகரமாக தேர்வுபெறாததாலும் மதராசாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் சமுதாய மாற்றத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவ்ர்கள் அல்லர். கான் பாக்கவி போன்ற சிலர் விதிவிலக்காக தங்களது சொந்த முயற்சியின் காரணமாக சிறப்பாக பிரதினிதிப்பவர்கள்.
அடுத்ததாக இஸ்லாத்தில் புரோகிதம், பூசாரி, பாதிரியார் என்று இடைத்தரகர்கள் கிடையாது. இன்றைக்கும் மலேசியா சிங்கப்பூரின் பலபகுதிகளில் சுராவ் எனப்படும் சிறிய பள்ளிவாயில்களில் தொழவருபவர்கள் தாங்களே பாங்குசொல்லி தொழவைப்பது தினசரி நடக்கின்றது. நானும் பலமுறை தொழவைத்திருக்கிறேன். நாமாக அவ்வாறு முடிவு செய்தால் அவர்கள் மேல் தவறு இல்லை. இஸ்லாத்தில் அறிஞர்கள் மட்டுமே உள்ளனர். எனவே ஒவ்வொரு முஸ்லிம் தாய் தகப்பனும் தங்களது வாழ்வில் இஸ்லாத்தை பேச்சிலும் , பழக்கவழக்கங்களிலும் கடைப்பிடித்தால் அதுவே பிள்ளைகளுக்குப் போதுமானது. இதற்கு உவமானம் ஒரு M.B.B.S. டாக்டரைப்போல. படித்து பட்டம் பெற்று ஹவுஸ் ஸர்ஜன் பயிற்சியும் பெற்ற பின்புதான் அவர் டாக்டர். அதைப்போல் நீயும் நானும் இருக்கவேணும் என்பதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது. மார்க்கத்திற்கு தங்களை உண்மையில் அர்ப்பணித்துக் கொண்டு வாழும் சிலரை நாம் ஸ்பெசலிஸ்ட் டாக்டருக்கு ஒப்பிடலாம். கிருத்தவப் பாதிரி முதலாவதாக தேர்வு செய்யப்படுகிறார், பின்பு முறையாக பயிற்றுவிக்கப் படுகிறார். எனவே எதற்காக பயிற்றுவிக்கப் பட்டாரோ அச்செயலை சரியாகச் செய்கிறார். நமது மெளலவிகளுக்கு நுழைவுத்தேர்வும் இல்லை, முறையான பயிற்சியும் இல்லை, உலகத்தரம் வாய்ந்த பாடதிட்டமும் இல்லை. தமிழகத்தில் யாரும் ஆரம்பித்து, எப்படியும் நடத்தி, புரிந்துணர்வை பரீட்சிக்காமல் இஷ்டப்படி சர்ட்டிபிகேட் கொடுக்கும் ஒரே ஸ்தாபனம் நமது மதராசாக்கள் தான். பங்களாதேசிலிருந்து நூற்றுக்கணக்கில் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள்கள் சிங்கை வந்து கட்டிடப்பணியாளர்களாக, மரவேலை செய்யும் தச்சர்களாக, இப்படி பல வேலைகள் செய்து உழைத்துச் சாப்பிடுகின்றனர். பகுதி நேரமாக பள்ளிவாயில்களில் சேவை செய்கின்றனர். பள்ளியைகழுவுவது, கஞ்சிகாச்சுவது, தொழுகைவைப்பது, ஓதிக்கொடுப்பது இவை அனைத்தையும் சேவையாகச் செய்கிறார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து ஹாபிள் என்றும், மெளலவி என்றும் கூறிக்கொண்டு இந்த நாட்டில் வந்து பிச்சை எடுத்து சட்டத்தைமீறி கைதுசெய்யப்பட்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சியை நாம் மறக்கமுடியாது. ஒரு முஸ்லிமுக்கு சுயமரியாதை இருக்கின்றது என்ற நபி மொழியை மெய்பித்தது பங்களாதேஷ் மெளலவிகள். பொய்ப்பிக்க முயலுவது நமது தமிழகத்தைச் சேர்ந்த சிலர்.
இல்ம்/கல்வி
மதரஸாக் கல்விதான் சிறந்தது என ஒருசாராரும், உலகக்கல்விதான் மனிதனுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும் எனவே நபி (ஸல்) சொன்னது இதைத்தான் என வாதிடுகின்றனர். நபி(ஸல்) காலத்திலிருந்து வெள்ளைகாரர்கள் இந்த நாட்டை பிடித்து ஆட்சி செய்யும் வரை நம்மிடம் இருந்தது ஒரு கல்விதான். அது தான் பயனுள்ள கல்வி எனவேதான் நபி (ஸல்) பயனில்லாத கல்வியிலிருந்து பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள். அதை கோடாரி போட்டுப் பிளந்தது வெள்ளையரின் ஆட்சியில்தான். லார்ட் மெக்காலே என்பவன் அறிமுகப்படுத்திய இந்த கல்வித்திட்டம் நம்மிடையே குட்டி மெக்காலேக்களை உருவாக்கத்தான் பயன்படுகின்றது. அவர்கள் லஞ்சம், வட்டி, வரதட்சினை என்பதெல்லாம் தீமைகள் என அறிவுறுத்தப்பட மாட்டார்கள். பணத்திற்கும், புகழுக்கும், பதவிக்கும் விலை போய்விடுவார்கள். இந்த கல்வி நிலையங்கள் அளிக்கும் சான்றிதழைத்தான் மரண சான்றிதழ் என மெளலான அபுல் அ·லா மவ்தூதி கூறுகிறார். நீங்கள் இப்போது சிந்தித்தாலும் எவ்வளவு பொருத்தமான வார்த்தை என விளங்கும். எனவே பயன் உள்ள கல்வி தான் இஸ்லாமிய கல்வி என்பதையும் அது குர்ஆன், நபிவழியோடு மனிதனுக்குப் பயன்தரும் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
நபி ஸல் காலத்தில் பள்ளிவாயில் நிர்வாகம்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மண்சுவர் , ஓலைக்கூரை தான் பள்ளிவாயில். ஆட்சிப் பொறுப்பும், பள்ளி நிர்வாகமும், இமாமத்தும் அவர்களிடம் தான் இருந்தது. இது தான் இஸ்லாத்தின் பொற்காலம். அடுத்து இஸ்லாம் பரவவும் பலபகுதிகளிலும் பள்ளிவாயில்கள் கட்டப்படவும் நிர்வாகமும் இமாமத்தும் ஒரே நபரிடம் இருந்தது. அப்போது நிர்வாகி சம்பளம் வாங்கவில்லை, சத்தியத்தை சொல்ல அவருக்கு தடையும் இல்லை. பிற்காலத்தில் நிர்வாகி வேறாகவும், இமாமத் செய்பவர் வேறாகவும் சம்பளத்துக்கு செய்யும் இதரவேலைகளைப்போலவும் இமாமத் ஆகிவிட்டது. சேவையோடு பணத்தையும் பிழைப்பையும் சம்பத்தப்படுத்திய போதுதான் பிரச்சனைகள் உருவானது. இன்றைக்கும் சுயமரியாதையை இழக்க விரும்பாத பல மெளலவிகள் வேறு துறைகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் பள்ளிவாயில்கள் படிப்பு, பயிற்சி, நியாயம் வழங்குதல், உதவி செய்தல், என மொத்தத்தில் மனிதனுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீத்வுகாணும் மையமாகத் திகழ்ந்திருக்கின்றது. ( இன்ஷா அல்லாஹ் எனது பள்ளிவாயில்களின் பயன்பாடு எனும் கட்டுரையில் பல நிகழ்கால உதாரணங்களை பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்)
தீர்வுகள்
1.இஸ்லாத்தின் ஆரம்பகாலம் தான் நமக்கு சரியான வழிகாட்டும் பொற்காலம் (REDISCOVER ISLAAM):
எந்தக் காலத்தையும் விட நபி (ஸல்) காலத்திலுள்ள வழிகாட்டுதல் தான் தீர்வுகளை சரியாக முன்வைக்கமுடியும். “ஒரு காலம் வரும் தீனில் நிலைத்திருப்பது கைகளில் நெருப்புக்கங்கை ஏந்தி இருப்பது போன்றிருக்கும்” என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். லேசாக அனல் அடித்தால் கூட தாங்காதவர்கள் தான் நம்மிடையே அதிகம். தங்களை வழிகெட்ட கூட்டம் என்று சொல்லிவிடுவார்களே என ஹலாலை ஹராம் என்றும், ஹராமை ஹலாலென்றும் சொல்பவர்கள் இருக்கும் வரை நாம் ஒரு அடி கூட நகரமுடியாது.
2.நல்லவர்கள் ஒன்றிணைவது
நீங்கள் நிர்வகியாக இருக்கலாம், மெளலவியாக இருக்கலாம், பொதுமக்களாய் இருக்கலாம் . அறிவுபலமும், தக்வாவும், போர்க்குணமுள்ள நல்லவர்கள் சேர்ந்து மாதிரிப் பள்ளிவாயில்களை நிர்வகிக்கலாம். சம்பளம் வாங்காமல் சேவையாய் நாமே தொழுகை நடத்தவேண்டும். இதன் மூலம் இது சாத்தியமே என பிறரும் உணர்ந்து இணைவார்கள்.
3. தொண்டூழிய அமைப்புகள் இச்செய்திகளை அறிவுப்பூர்வமாக மக்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும்.
4.மாற்றம் மக்களிடமிருந்துதான்:
குறை சொல்வதை விட்டுவிட்டு உங்களின் எதிர்கால சந்ததிகளின் நன்மைகருதி இத்தகைய நற்பணிகளில் ஈடுபடுவோருக்கு உதவவேண்டும், ஒதுங்கிவிடக்கூடாது.
5. சத்தியத்தை சொல்வதற்கு சர்ட்டிபிகேட் வேண்டும் என ஒதுங்குவது தவறு.”உங்களில் சிறந்தவர் குர்ஆனை கற்றுக் கொள்பவரும் கற்றுக் கொடுப்பவருமாவார்.” என்மூலம் ஒரு விஷயம் தெரிந்தாலும் பிறருக்கு எத்திவைக்கவும்.” என்ற நபி மொழிகளெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஆகும். நமக்குத் தெரிந்ததை சொல்லித்தராமல் போனால் உங்கள் பிள்ளைகள் தவறை சரி என்று பின்பற்ற வாய்ப்பு இருக்கின்றது.
6. உண்மையை சொன்னால் சொல்லடியும் கல்லடியும் மிரட்டலும் வரும் . இதை பொறுமையோடு ஏற்றுக் கொள்பவரே உண்மையான தவ்ஹீத், சுன்னத் வல் ஜமாத், உண்மையான முஸ்லிம். (பத்வா பாக்கியாதுஸ் ஸாலிஹாத்தை வெளியிட்ட கான் பாகவி அவர்களையும் இவ்வறு தான் படுத்தினர்கள்)
இதோ சில மாடல்கள்
பங்களாதேஷ்:
வறுமையான நாடாக இருந்தாலும்இங்கே பல மதரஸாக்கள் மார்க்கக் கல்வியோடு தச்சுத் தொழில், நர்சிங் , ப்ளம்பிங், வயரிங் இப்படி பல தொழிற்பயிற்சிகளை அளிக்கின்றனர். இவர்கள் நமது ஊர் ஹாபிஸ் மற்றும் மெளலவிகள் போல் குமர் காரியம் என்றோ, தர்மம் வேண்டும் என்றோ கேட்டு அவமானங்களைச் சந்திப்பதில்லை. மாறாக சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் உழைத்து உண்கின்றனர். இவர்கள் உண்மையில் நபி (ஸல்) அவர்களை மதிக்கவேண்டிய விதத்தில் மதிக்கின்றனர்.ஏனென்றால்:
1.“நீங்கள் உண்ணும் உணவில் உழைத்து உண்ணும் உணவே சிறந்தது”
2.“யார் ஒருவன் தனக்காகவும், தன் மனைவி மக்களுக்காகவும், தன் அண்டை வீட்டாருக்ககவும் உழைக்கின்றானோ அவன் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறான்”
3.”உழைக்காமல் யார் இரந்து உண்கின்றார்களோ அவர்கள் முகத்தில் தசை இன்றி முகம் கரிந்த நிலையில் மறுமையில் எழுப்பப் படுவார்கள்” என்று அறிந்து இம்மையிலும் மறுமையிலும் தனது கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ளுதல்
இப்படிப்பட்ட நபி மொழிகளை உண்மையில் மதிப்பதால் தான் இமாமத்தையும் தொழிலாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றைக்கும் ஆயிரக் கணக்கில் இங்கு தனது தேவைக்கு உழைத்து உண்டு சேவையை இலவசமாக செய்துகொண்டு இருக்கிண்றனர்.
இலங்கை ஜாமியா நளீமியா
நளீம் ஹாஜியார் என்பவர் தனது உழைப்பினால் சம்பாதித்ததைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்தாபனம். இங்கு படிப்பவர்கள் மார்க்கக்கல்வியில் காலத்திற்கேற்ப சிறந்த பயிற்றுவிக்கப் படுகின்றனர். அதோடு தாங்கள் கண்ணியத்தோடு வாழ பல துறைகளிலும் உதாரணமாக: பொருளாதாரரம், வணிகம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிபெற்று உலகெங்கும் பணியாற்றி கண்ணியத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
மாறாக நாம் எதீம்களை மொட்டைபோட்டு, ஜிப்பா மாட்டி, பிடிக்காததை யெல்லாம் படிக்கச் சொல்லி, அடையாளப்படுத்தி பணம் வசூல் செய்கிண்றனர். நம் பிள்ளைகள் கிராப் வெட்டி நன்கு உடையணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்வதைப் பார்த்து மனம் வெதும்பி ஏங்கித் தவிக்கின்றனர். என்னிடமே பல எத்தீம்கள் அழுது புலம்பியுள்ளனர்.
நிறைவாக..
நிர்வகிப்பவர், மெளலவிமார், ஜமாத்தார் போன்றோரை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
1. ஒரளவு மார்க்க ஞானம் உள்ளவர், எந்தசெயலை செய்வதற்கு முன்பும் மார்க்கம் அனுமதித்திருக்கின்றதா என பத்வாவை விலைக்குவாங்காமல் தக்வாவின் அடிப்படையில் நடப்பார். தன்னளவில் மட்டும் நல்லவராக வாழாமல் , நன்மையை ஏவி தீமைக்கு எதிரகப்போரடுவார். இத்தகையவர் மிக மிக அரிதாகவே இருப்பர். ஆனால் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
2. மார்க்கம் அதிகம் தெரிந்திருக்கும், பேசவும் செய்வர், செயல்படவும் செய்வர். ஆனால் நன்மையை ஏவி தீமையை விளக்க அவசியம் இல்லை என்பார். செயல் என்று வந்தால் இவர்களை முழுவதுமாக முன்னுதாரணமாகக் கொள்ளமுடியாது.
3. மார்க்கம் ஓரளவு விளங்கி இருப்பார் அல்லது நன்கு அறிந்தும் இருப்பார். ஆனால் தன்னளவிலும் செயல்படமாட்டார். பிறருக்குச் சொல்லவும் தயங்குவார். கேட்டால் நிர்பந்தம், மக்களை, நிர்வாகத்தை, அடியாட்களை அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பார்.
4. மார்க்கம் தெரியாது. ஆனால் இயற்கையாக நன்மைவிரும்பியாக இருப்பார். சொன்னால் விளக்கினால் ஏற்றுக்கொள்வார். பெரும்பாலும் இவர் மார்க்கத்தை பேசி, செயலில் இல்லாத வேடதாரிகளைப் பார்த்து வெதும்பிப்போய் மார்க்கத்தில் தீர்வுகளை தேடமாட்டார்.
5. மார்க்கம் பற்றி அக்கறை இருக்காது , வெளிப்படையாகப் பாவங்கள் புரிவார். எவ்வளவு சொன்னாலும் இந்த உலக ஆசையின் காரணமாக கபுருக்கு செல்லும் வரை பாவதிலிருந்து விடுபடமாட்டார்.
ஆக முதலாமவரும் நான்காவது நபரும் முதலில் ஒன்றிணையவேண்டும். அடுத்து இரண்டாமவரை அணுகவேண்டும். பின்பு மெதுவாக மதில் மேல் பூனையாக உள்ளவர்கள் வருவார்கள். அவர்களுக்காக நாம் ஒருபோதும் காத்திருக்கக் கூடாது. பெரும்பாலும் நல்லவர்களை நாம் விட்டுவிட்டு , மார்க்க அறிவு இருந்தால் போதுமென முடிவெடுத்து ஏமாந்து போகிறோம்.
இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் தீர்வுகளை கையில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர்
குற்றம் சாட்டுவது.
நமக்கு போட்டிபோட்டுக் கட்டும் மிக உயரமான மிணாராக்கள் தேவை இல்லை
போட்டிபோட்டு அலங்கரிக்கப்பட்ட பள்ளிவாயில்கள் தேவை இல்லை
பளிங்குத்தரைகள் தேவை இல்லை
நிதிதிரட்ட ஊர் ஊராய் அலைந்து அவமானப்பட வேண்டியதில்லை
வசூலிப்பவருக்கு 30% கமிஷன் கொடுத்து பல பொய்களை சொல்லவைக்க வேண்டியதில்லை
தவறான வழியில் பொருளீட்டும் பணக்காரனையும், லஞ்சத்தில் ஊறிய அரசியல்வாதிகளையும் கெஞ்சவேண்டியதுமில்லை. அவர்களை தலமைப்பதவிக்கு அமர்த்தி அல்லாஹ்விடம் மறுமையில் குற்றவாளியாகவும், இம்மையில் தோல்விகளைத்தழுவ வேண்டியதுமிலை.
நபி (ஸல்) காலத்தில் எதிரிகளின் மனதில் திகிலூட்டவும், உறுதியான ஈமானை பெறவும், உடல் பொருள் ஆவி ஆகியவற்றை தியாகங்கள் செய்ய காரணமாயிருந்த குடிசைப்பள்ளிவாயிலான அந்த மஸ்ஜித் நபவி போன்ற பள்ளிவாயில்களே போதும்.
பணத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் , நல்ல மனிதர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். மற்றவை தானாக மாறும்.
அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அறிவுரை வழங்கியாபோது “ எப்போதும் ஏழைகளோடும் (poor) ,தேவையுடையோர்களோடும் (needy) இருப்பீராக என்றார்கள்”, உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “ நீங்கள் என்னோடு மறுமையில் சேர்ந்திருக்க வேண்டுமானால் ஏழைகளோடு இருங்கள் என்றார்கள். ஆனால் இன்று நாம் இதை பின்பற்றுகிறோமா?.
சகோதர சகோதரிகளே, இஸ்லாமிய பணிகளில் பணத்தையும், தீமைகளில் ஈடுபடும் அதிகாரவர்க்கத்தையும், முன்நிறுத்தாமல் , ஈமானில் பலம் உள்ள நல்லமனிதர்களை முன்னிறுத்துங்கள். பலமாற்றங்கள் தானே ஏற்படும்
இன்ஷாஅல்லாஹ்.