
பள்ளிவாசல் என்பது ஓரிறைவனான அல்லாஹ்வைத் தொழுது வழிபடுவதற்கான இறையில்லம் ஆகும். அரபியில் மஸ்ஜித் என்பர். இதற்கு சிரவணக்கம் (ஸஜ்தா) செய்யும் இடம் என்று பொருள்.
இறையச்சம் மிக்க இறையடியார்களின் புகலிடமாகவும் மஸ்ஜித்களே விளங்குகின்றன. அல்லாஹ்வின் அருளையும் ஆன்மாவுக்கு பயிற்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் தேடுபவர்கள் ஒதுங்குமிடம் மஸ்ஜிதாகவே இருக்க முடியும்.
ஒருவர் மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருப்பது, அவர் ஓர் உண்மை விசுவாசி என்பதற்கு போதுமான சான்றாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்:
“ஒருவர் மஸ்ஜிதுடன் தொடர்புடையவராக இருப்பின் அவருடைய ஈமானுக்கு நீங்கள் சாட்சி கூறுங்கள்.” (அத்திர்மிதி, இப்னு மாஜா)
இவ்வாறு மஸ்ஜித்கள் புனிதத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குவது போலவே, அவை முஸ்லிம் சமூகத்தின் இதயமாகவும் அச்சாணியாகவும் காணப்படுகின்றன. ஏனெனில், சமூக நிர்மாணத்திற்கும் நிர்வாகத்திற்குமான கேந்திர நிலையங்களாக அமைவன மஸ்ஜித்களே.
இதனால்தான், நபியவர்கள் தான் விரும்பும் ஒரு கொள்கைவழிச் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் மதீனா நோக்கி பயணமானபோது தான் செல்லும் வழியில் இடையில் தங்கிய இடமான குபாவில் கூட ஒரு மஸ்ஜிதை நிர்மாணித்தார்கள். மதீனா சென்றடைந்ததும் அன்னாரின் முதற்கட்ட பணியாக அமைந்ததும் மஸ்ஜித் நிர்மாணமே.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா சமூகத்தை மஸ்ஜிதுந் நபவியை மையமாக வைத்தே கட்டியெழுப்பினார்கள். அன்று மஸ்ஜிதுந் நபவி வெறும் வணக்கங்கள் நிறைவேற்றப்படும் இடமாக மாத்திரம் இருக்கவில்லை. இறைவழிபாடு, கல்வி, கேள்வி, வழக்கு விசாரணை, தூதுக் குழுவினர் சந்திப்பு, வீரவிளையாட்டு எனச் சமூகத்தின் பல்துறை நடவடிக்கைகளும் எல்லா சமூகப் பணிகளும் அங்குதான் நடைபெற்றன.
மஸ்ஜிதுந் நபவி உட்பட இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மஸ்ஜிதுகள் ஆற்றிய பணி மகத்தானது. மதீனா பள்ளிவாசலில், தாம் கற்ற கல்வியை நபித்தோழர்கள், குறிப்பாகத் திண்ணைத் தோழர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்ததன் பலனாகவே இஸ்லாம் பரவியது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் வழக்கு விசாரணைகளும் தீர்ப்பு வழங்கப்படுவதும் பள்ளிவாசலில்தான் நடந்தேறின.
வரலாற்றில் பல மஸ்ஜிதுகள் நீதிமன்றங்களாகவும் ஆலோசனை மன்றங்களாகவும் செயற்பட்டுள்ளன. நீதிபதிகள் அரச தலையீடு ஏதுமின்றி பொதுமக்களின் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள். நீதிபதிகளான ஷுரைஹ், மர்வான் போன்றவர்கள் பள்ளிவாசல்களிலேயே வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள். எகிப்தில் அம்ரு இப்னுல் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களினால் புஸ்தாத் நகரத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட காழி கைஸ் பள்ளிவாசலையே தனது நீதிமன்றமாக அமைத்துக் கொண்டார். உஹத், அஹ்ஸாப் முதலான யுத்தங்களின்போது கலந்தாலோசனைகள் மஸ்ஜிதுந் நபவியிலேயே இடம்பெற்றன.
மதீனாவுக்கு வந்த நஜ்ரான் கிறிஸ்துவ தூதுக்குழு நபியவர்களின் பணிப்புரையின் பேரில் மஸ்ஜிதுந் நபவியில் தங்குவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் பிரயாணிகள், விருந்தினர், ஏழைகள் முதலானோருக்கு புகலிடங்களாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
யுத்தங்களில் காயப்பட்டவர்களுக்கு மஸ்ஜிதுகளில் வைத்து சிசிச்சை அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அகழி யுத்தத்தின்போது காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மஸ்ஜிதில் ஒரு விஷேட கூடாரம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
இவ்வாறே பள்ளிவாசலில் வீர விளையாட்டுகள் நடைபெற்றதற்கான சான்றுகளும் உள்ளன.
பொதுவாக முஸ்லிம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மஸ்ஜிதுகளில் அமர்ந்து சிகிச்சையளிக்கும் வழமை இருந்து வந்துள்ளது. பெரும்பாலும் மஸ்ஜிதுகளில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இங்கு மருந்துகளை வைப்பதற்கான பிரத்தியேக இடங்களும் காணப்பட்டன. ஸ்பெய்னின் குர்துபா பெரிய பள்ளிவாசல் ஒரு மருத்துவமனையாகவும் செயற்பட்டது.
ஸகாத், ஸகாதுல் பித்ர் முதலான வரிகளும் தர்மநிதிகளும் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற இடங்களாகவும் மஸ்ஜிதுகள் இருந்து வந்துள்ளன.
நபியவர்களின் காலத்திலும் பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் கல்விக்கூடங்களாக விளங்கின. மஸ்ஜிதுந் நபவியில் பல நபித் தோழர்கள் பாடம் நடத்தி வந்தார்கள். அலி (ரழியல்லஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) போன்ற நபித் தோழர்கள் மஸ்ஜிதில் கல்வி கற்றவர்களே. இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹிமஹுல்லாஹ்) தனது வகுப்புக்களை மஸ்ஜிதுந் நபவியில் வைத்தே நடத்தி வந்தார்கள். எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நிர்மாணிக் கப்பட்ட ஜாமிஉ அம்ரு இப்னுல் ஆஸ் பள்ளிவாசலில் ஹிஜ்ரி 36 அளவில் பாடபோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு 40க்கும் அதிகமான கல்வி வட்டங்கள் இருந்தன. இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்), இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹிமஹுல்லாஹ்) போன்றோரின் வகுப்புகளும் இந்த மஸ்ஜிதில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய உலகில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல்அஸ்ஹர் ஆரம்பத்தில் (ஹிஜ்ரி 361 அளவில்) ஒரு மஸ்ஜிதாகவே இருந்தது. டியூனீஸியாவில் அமைந்துள்ள அஸ்ஸெய்தூனா பல்கலைக்கழகமும் ஜாமிஉ ஸெய்தூனா என்ற மஸ்ஜிதிலிருந்தே உருவானதாகும். பக்தாதில் அப்பாஸிய கலீபா அபூ ஜஃபர் அல்மன்ஸூர் நிர்மாணித்த ஜாமிஉல் மன்ஸூரிலும் டமஸ்கஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்ஜாமிஉல் உமவி பள்ளிவாசலிலும் பல்வேறுபட்ட கலைகள் போதிக்கப்பட்டன.
பொதுவாக மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புகளில் மார்க்கப் பாடங்கள் மாத்திரமன்றி மொழி, இலக்கியம், இலக்கணம், கவிதை, வானவியல், கணிதம் போன்ற பல்வேறு கலைகள் போதிக்கப்பட்டதாக கலாநிதி முஸ்தபா ஸிபாஈ இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
“மஸ்ஜித் பாடசாலையின் ஆரம்ப வித்தாக அமைந்தது. அது இபாதத்துக்குரிய இடமாக மாத்திரமன்றி, முஸ்லிம்களுக்கு மார்க்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் போதிக்கும் கலையகமாகவும் விளங்கியது. அஞ்ஞான இருளில் இருந்த மேற்குலகிற்கு அறிவொளி பரப்பிய முஸ்லிம் ஸ்பெய்னின் அறிவியல் இயக்கத்திற்கு அடிப்படையாக ஸ்பெய்னிய மஸ்ஜிதுகளே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கெய்ரோ ஜுமுஆ பள்ளிவாசலில் மாத்திரம் 110 வகுப்புகள் நடந்ததாக அறிஞர் அல்மக்திஸி குறிப்பிடுகின்றார்.
சமூகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களும் செய்திகளும் மஸ்ஜிதுகளுக்கூடாகவே வழங்கப்பட்டன. இஸ்லாத்தின் தூதை முன்வைக்கும் இடங்களாகவும் அவை இருந்து வந்தன. உரைகள், பிரசங்கங்கள், உரையாடல்கள், கவியரங்கங்கள், விவாத மேடைகள் முதலானவை மஸ்ஜிதுகளில் பரவலாக இடம்பெற்றன. இவற்றுக்கூடாக இஸ்லாத்தின் தூது முன்வைக்கப்பட்டது.”
அன்று மஸ்ஜிதுகள் எவ்வாறு சமூகத்தின் பல்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்றி வந்தன என்பது பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“இஸ்லாமிய அறிஞர்கள் அமரும் இடங்களாகவும் சமூகத்தின் கழகங்களாகவும் மஸ்ஜிதுகளே விளங்கின. நபியவர்கள் தனது புனிதப் பள்ளிவாசலை தக்வாவின் அடிப்படையில் நிர்மாணித்தார்கள். அங்கு தொழுதல், ஓதுதல், திக்ரு செய்தல், கற்றல், கற்பித்தல் உரை நிகழ்த்துதல் முதலான அனைத்தும் நடைபெற்றன. அரசியல் தலைவர்கள், தளபதிகள் நியமனம், அறிமுகங்கள் எல்லாம் நடந்தன. முஸ்லிம்கள் தமது உலக, மறுமை தொடர்பான எல்லா விவகாரங்களுக்காகவும் அங்குதான் கூடினார்கள்.”
மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை
இன்று பள்ளிவாசல்கள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்திருக்கின்றமை வேதனையளிக்கிறது. நிதி, நீதி, நிர்வாகம் உட்பட முஸ்லிம் சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் மையமாக விளங்கிய பள்ளிவாசல் இன்று வணக்க வழிபாடுகளுடனும் சில சிறிய அளவிலான செயற்பாடுகளுடனும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதைக்காண முடிகின்றது. மஸ்ஜித்களின் இவ்வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மஸ்ஜிதுகள் முஸ்லிம் சமூகத்தில் வகிக்கும் இடத்தை நன்கு புரிந்து கொண்ட காலனித்துவவாதிகள், மஸ்ஜிதுகள் வணக்கஸ்தலங்களே அன்றி சமூக விவகாரங்களை மேற்கொள்வதற்கான இடமல்ல என்ற கண்ணோட்டத்தை திட்டமிட்ட அடிப்படையில் வளர்த்தனர். காலப்போக்கில் இக்கண்ணோட்டம் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியதன் விளைவாக மஸ்ஜிதுகளின் வரலாற்றுப் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.
ஆயினும், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உலகளாவிய ரீதியில் உருவான இஸ்லாமிய எழுச்சியின் விளைவாக, மஸ்ஜிதுகள் முஸ்லிம் சமூகத்தில் அவை பெற்றிருந்த இடத்தை மீண்டும் பெறும் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கும் இந்நாட்டில் அமைந்துள்ள மஸ்ஜிதுகளையும் செயற்திறன் மிக்க சமூக மையங்களாக மாற்றுவதற்கு ஆவன செய்தல் காலத்தின் தேவையும் மார்க்கக் கடமையுமாகும்.
எமது பள்ளிவாசல்களை செயற்திறன்மிக்கவையாக மாற்றுவதில் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பரிபாலன சபைகளின் பங்கு மகத்தானதாகும்.
இமாமின் வகிபங்கு
பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இமாம் மிகச் சிறந்த ஒருவராக, நன்கு கற்றுத் தேர்ந்த, மார்க்க விவகாரங்களில் ஆழமான விளக்கமுடைய சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்த, பல கோணங்களிலும் சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்திறனுடையவராக, சாணக்கியமிக்கவராகத் திகழ வேண்டும். மக்களால் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை இமாமினால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.
எந்தவொரு விடயத்தையும் ஷரீஆ கண்னோட்டத்திலும் அறிவியல் பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் நோக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல மனப்பாங்கும் நுண்ணறியும் திறனும் அவரிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது சிறந்த, பொருத்தமான தீர்வை முன்வைக்கும் நோக்கில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
குலபாஉர் ராஷீதீன்கள் காலப் பகுதியில் ஆட்சியாளரே (கலீபா) பள்ளிவாசல் இமாமாகவும் கடமையாற்றினார். உமைய்யா, அப்பாஸிய காலப் பகுதியில் ஆட்சியாளர் மார்க்கத்தின் தலைவராக, இமாமாக கடமையாற்ற வில்லை. இதன் விளைவாக மத்ஹப்கள் தோற்றம் பெற்றன. ஆட்சியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இன்று பள்ளிவாசல் நிர்வாகமே குறித்த பிரதேசத்தை அல்லது ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்நிலை மாறி இமாம் முழு ஊரையும் பகுதியையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்குமளவு ஆளுமை பெற்றவராகத் திகழ வேண்டும்.
பள்ளிவாசல் இமாம் ஷரீஆத் துறையில் முதமானி அல்லது முதுகலைமானிக் கற்கைகளை நிறைவு செய்தவராக அல்லது ஷரீஆத் துறை உட்பட்ட பல்வேறு துறைகளிலும் தேர்ச்சிமிக்கவராக நவீன தொழில்நுட் பங்களைக் கற்றறிந்தவராக திகழ்ந்தால் ஊர் மக்கள் இமாமைத் தேடி வருவார்கள். ஊரில் இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல், ஆளுமை அல்லது பிரச்சினையை இனங்கண்டு எத்தகைய துறைசார்ந்தோரைக் கொண்டு இதற்குத் தீர்வு காணலாம் என்று வழிகாட்டக் கூடிய ஓர் இமாம் பள்ளிவாசலுக்கு தலைமை தாங்கினால் அந்த இமாமைத் தேடி மக்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள். அப்போது அந்த இமாமினால் மக்களுக்கு கட்டளை பிறப்பித்து அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அப்போதுதான் சமூக மாற்றம் சாத்தியப்படும்.
சமூகத்தை வழிநடத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் பங்கை விட இமாமின் பங்கு மகத்தானது. உமைய்யா, அப்பாஸிய காலத்தில் இமாம்களே சமூகத்தை வழிநடத்தினார்கள். இமாம்கள் ஆட்சியாளரின் தீர்ப்புக்கு முரணாக நேர்மையான தீர்ப்புக்களை வழங்கினர்.
தொழுகை ஒரு முஸ்லிமின் தக்வாவை அதிகரிப்பது போல பள்ளிவாசல் சமூகத்தின் தக்வாவை அதிகரிக்க வேண்டும்.
பள்ளிவாசல் பரிபாலனம்
இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது பொறுப்பான ஒரு பணியாகும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும் பரிபாலிப்பதும் நேர்வழி பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9: 18)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒரு கறுப்பினப் பெண் இருந்தாள். பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளைக்காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப் பற்றி விசாரித்தார்கள். அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. “அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?” என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள், அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறை வேற்றினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமான ஆதாரமாகும். மஸ்ஜித்களை நிர்வகிப்பது ஓர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்புமாகும். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலன சபையில் இருக்கின்றபோதே ஒரு பள்ளிவாசல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலன சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலனத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.
“அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலனம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழி பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே.” (அல்குர்ஆன் 9: 18)
பள்ளிவாசல்களும் பணிகளும்
இலங்கை, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு நாடு. இப்போது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் சர்வதேச மட்டத்திலும் ஏன் உள்நாட்டு மட்டத்திலும் கூட பிழையான கருத்துக்கள் பரவலாக உருவாகியுள்ளன. இந்நிலையில் உண்மை நிலையை முஸ்லிமல்லாதாருக்கு புரியவைப்பதற்கும் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதற்கும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதற்கும் உரிய இடங்களாக மஸ்ஜிதுகள் காணப்படுகின்றன. எனவே, முஸ்லிமல்லாதோர் எமது மஸ்ஜிதுகளுக்கு வருவதற்கும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளை அறிவதற்கும் வழிசெய்வது சமூகத்தின் முன்னால் உள்ள மிகப் பெரும் கடமையாகும்.
இன்று அமெரிக்கா, பிரித்தானியா முதலான மேற்குலக நாடுகளிலும் பஹ்ரைன் போன்ற சில மத்திய கிழக்கு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதோருக்கான தஃவாவை முன்வைப்பதில் சில மஸ்ஜிதுகள் முன்னணியில் நின்று இயங்கி வருகின்றன. மஸ்ஜிதை பார்வையிட வருபவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் தேவையான விளக்கங்களை வழங்கவும் இப்பள்ளிவாசல்களில் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாம் பற்றிய நூல்களையும் பிரசுரங்களையும் பெற்றுக்கொள்வதற்கு இங்கு விஷேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
லண்டனிலுள்ள வைட் செப்பள் நகரிலுள்ள எல்.எம்.ஸி. பள்ளிவாசல், லண்டன் பெரிய பள்ளிவாசல் மற்றும் நிவ்யோர்க் பள்ளிவாசல்களை இதற்கு நல்ல முன்மாதிரிகளாகக் கொள்ளலாம்.
ரமழானில் பள்ளிவாசல்
பள்ளிவாசல் தொழுகை நிலைநாட்டுதல், மார்க்கத்தை நிலைநாட்டுதல் ஆகிய பணிகளின் மையமாகத் திகழ்கிறது. மார்க்கத்தை நிலைநாட்டும் பணி பள்ளிவாசலிலிருந்தே தோற்றம் பெற வேண்டும்.
நோன்பில் ஸகாத், ஸதகா, ஸதகதுல் பித்ர் ஆகியன பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் ஒன்று திரட்டப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவை நிறுவனமயப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுவதனூடாக சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வை முகாமைத்துவம் செய்யலாம்.
தவிரவும் பள்ளிவாசல் அந்தந்த ஊரிலுள்ள ஸகாத் பெறத் தகுதியானோரை சரியாக இனம்கண்டு அவர்களுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டும். மறுபக்கம் ஸகாத் கொடுக்கத் தகுதியுடையவர்களை அடையாளப்படுத்தி அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற வேண்டும். ஸகாத் கொடுக்க மறுப்பவர்களை பள்ளிவாசல் புறக்கணிக்க வேண்டும். அவர்களை சமூகத்திடமிருந்து நிராகரிக்க வேண்டும். ஸகாத் கொடுப்பவர்களும் தாம் போலியான கணக்கு வாழ்க்கைக் காட்டாமல் தமது பணத்துக்கு கணக்கிட்டு முறைப்படி ஸகாத்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சுமூகத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க முடியும்.
வழமையை விட நோன்பு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசலுக்கான தொடர்பு அதிகமானது. எனவே, நோன்பு காலத்தில் மக்களை பள்ளிவாசலின்பால் கவரக்கூடிய வகையில் தரமான நிகழ்ச்சிகளை பள்ளிவாசல் ஏற்பாடு செய்ய வேண்டும். நோன்பின் பிறகும் மக்கள் பள்ளிவாசலுடன் இறுக்கமான தொடர்பைப் பேணும் வகையில் பள்ளிவாசல் காத்திரமான செயற்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை பெண்கள் ரமழான் காலத்தில் பெரும்பாலான நேரங்களை சமையல் வேலையில் கழித்து விடுகின்றனர். ரமழான் மாதம் இபாதத்துகளின் மாதம். எனவே, பெண்களின் ஆத்மிக விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி அவர்களுக்கென்று பிரத்தியேகமான நிகழ்ச்சிகளை பள்ளிவாசலில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கருத்து வேறுபட்ட விடயங்களில் கவனம் செலுத்தாமல் சுவனத்தை நோக்கிய பாதையைச் செப்பனிடுவதற்கான ஒரு காலமாக ரமழான் மாதத்தைப் பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் இலக்காகக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் இந்த ரமழானிலிருந்து பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மேற்கொள்ளக் கூடிய சில முக்கிய பணிகளைத் தருகிறோம்.
1. பள்ளிவாசலை சார்ந்து நடைபெறும் மத்ரஸாவில் அல்குர்ஆன், சன்மார்க்க போதனைகளுடன் நடைமுறைக் கல்வியுடன் தொடர்பான வகுப்புகளையும் நடத்த ஒழுங்கு செய்தல்.
2. நூல் நிலையம் அமைத்தல்.
3. பெண்களுக்காக பள்ளியில் பிரத்தியேக இடம் ஒதுக்குதல்.
4. சமூகத்தில் உருவாகும் பிணக்குகளையும் சர்ச்சைகளையும் பள்ளியில் தீர்த்து வைக்க வழிசெய்தல்.
5. நிவாரண உதவிகள், சமூக சேவைகளுக்கான மையமாக இயங்குதல்.
6. வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.
7. சமூக நலத் திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.
8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.
8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.
9. இமாம்கள், கதீப்மார்களைப் பயிற்றுவிக்க ஒழுங்கு செய்தல்.
10. குத்பாக்களை செயற்றிறன்மிக்கதாக அமைத்துக் கொள்ள ஆவன செய்தல்.
11. முஸ்லிமல்லாதோர் பள்ளிவாயலை வந்து பார்வையிடவும் தேவையான விளக்கங்களைப் பெறவும் உரிய ஏற்பாடுகளை செய்தல்.
12. ஊரில் வசிக்கும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக் கொள்ளல்.
13. ஊரில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும். (சீதனம், வட்டி, மணமுறிவு, இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயலவேண்டும்)
14. சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ மையங்களை உருவாக்க வேண்டும்.
15. மாணவ மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை ஒரு மஸ்ஜிதில் மேற்கொள்வதற்கு மஸ்ஜிதின் கட்டட அமைப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்த வகையில் மஸ்ஜிதுகளில் பெண்களுக்கான தொழுகையறை, நூலகம், மாநாட்டு மண்டபம், வகுப்பறைகள், வரவேற்பறை முதலான பகுதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும். இன்று உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்ற மஸ்ஜிதுகளில் இப்பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதை காண முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு பள்ளிவாசலும் இஸ்லாமிய மத்திய நிலையமாக இயங்க வழிவகை செய்யப்படுவதன் மூலமே சமூக மாற்றத்தில் பள்ளிவாசலுக்கிருந்த வகிபங்கு புத்துயிர் பெற்று மீண்டும் அந்தப் பொற்காலம் பிறக்கும்.
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா ஆகியோர் “சமூகப் புனரமைப்பில் மஸ்ஜித்களின் வகிபங்கு” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை, கலந்துரையாடிய கருத்துக்களை மையமாக வைத்து இவ்வாக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.